புதுடெல்லி: தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் இருமாநில பிரச்னையை தீர்க்கும் விதமாக புதியதாக தனி தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக ஒன்றிய அரசிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அரசுக்கு காலக்கெடு விதித்து இருந்தது.
இதில் பல தருணங்களில் ஒன்றிய அரசு தீர்ப்பாயம் அமைக்காமல் காலதாமதம் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இதற்கிடையில் தற்போது இந்த விவகாரத்தில் உடன்பாட்டு குழு ஒன்று ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதில், ‘‘பெண்ணையாறு நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் குஷ்வேந்தர் ஒஹரா தலைமையில் குழு அமைக்கபட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.