மதுரை: செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசன் விசாரணைக்கு ஆஜரானார். மதுரை போலீசார் நேற்று சம்மன் அனுப்பியிருந்ததை அடுத்து இன்று விசாரணை டிடிஎப் வாசன் ஆஜரானார்.
செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் ஜாமீன் பெற்ற யூடியூபர் வாசன், செல்போனை ஒப்படைக்க வேண்டுமென மதுரை போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மதுரை, வண்டியூர் ரிங்ரோடு டோல்கேட்டில் கடந்த 15ம் தேதி தனது காரை ஓட்டிச் சென்ற டிடிஎப்.வாசன், அது தொடர்பான வீடியோவை யூடியூபில் வெளியிட்டார். இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது.
இதுதொடர்பான புகாரின்பேரில் மதுரை அண்ணாநகர் போலீசார், வாசன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என உத்தரவாதம் தாக்கல் செய்யுமாறும், மதுரை அண்ணா நகர் போலீசில் 10 நாட்களுக்கு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து யூடியூபர் வாசன் நேற்று காலை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். 3வது நாளாக அண்ணா நகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த டிடிஎஃப் வாசனிடம் சம்மன் ஒப்படைத்துள்ளனர். அப்போது அண்ணாநகர் போலீசார், வாசன் காரை ஓட்டும்போது பேசிய செல்போனை விசாரணைக்காக 3 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று ஆஜரான டிடிஎப் வாசன் செல்போனை போலீசிடம் ஒப்படைக்க அவகாசம் கோரியுள்ளார்.