சென்னை: அயனாவரத்தில் கடந்த ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கை, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் நடத்தி வந்தார். வழக்கு தாமதமாக சென்றதால், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன், இந்த வழக்கில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜயகுமாருக்கும், செந்தில்நாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இவர்களை சமாதானம் செய்ய மூத்த வழக்கறிஞர்கள் சிலர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு செந்தில்நாதன் தரப்பினரை நேரில் அழைத்து, எழும்பூர் வழக்கறிஞர் விஜயகுமார் தரப்பினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், நாங்கள் எடுத்த வழக்கில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள், என்று கேட்டுள்ளனர். இதனால் இருதருப்புக்கும் நீதிமன்ற வளாகத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பு வழக்கறிஞர்கள் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட காட்சியை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவியது.