புதுடெல்லி: பிரதமர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் லோக்பால் அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த 2022ம் ஆண்டு மே 27ம் தேதி தன் பதவிக் காலத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் மாணிக்கராவ் கன்வில்கர் லோக்பால் அமைப்பின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழச்சியில் லோக்பால் தலைவராக ஏ.எம்.கன்வில்கள் பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.