இதனையடுத்து அலுவலகத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் சசிகலாவும், டிடிவி.தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். அப்போது இந்த அலுவலகம் சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்து வந்த பூங்குன்றன் ஆகியோரை டிரஸ்டியாக கொண்ட கமிட்டி பெயரில் இருப்பதாகவும், அதிமுகவினர் யாரும் செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்டிடம் செயல்பாடின்றி கிடந்தது. தற்போது டிடிவி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். தேனி தெற்கு மாவட்ட அமமுகவினர் பிரச்னைக்குரிய இந்த மாவட்ட தலைமை அலுவலகத்திற்குள் நேற்று திடீரென வந்தனர். அப்போது அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு உற்சாகமாக மாலையணிவித்தனர். பின்னர், போடி தொகுதி அமமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் போடி, கம்பம் சட்டமன்ற தொகுதி அமமுகவினர் கலந்து கொண்டனர்.
அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அமமுகவினர் கூட்டம் நடத்தியதால் அம்மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுமதி கிடைத்ததால் கூட்டம் நடத்தினோம்: தேனி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துச்சாமிகூறுகையில்,‘இந்த கட்டிடம் டிடிவி.தினகரன் மற்றும் பூங்குன்றன் தரப்பில் உள்ளதற்கான ஆவணங்களை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தோம். எங்கள் தரப்பினர் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது’’ என்றார். தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்டிகே.ஜக்கையன் கூறுகையில்,‘அலுவலக வளாகத்திற்குள் அமமுகவினர் நுழைந்தது குறித்து கலெக்டரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.