புதுடெல்லி: டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம்ஆத்மி எம்பி சஞ்சய்சிங்கிற்கு அக்.10 வரை காவல்வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தற்போது ஆம்ஆத்மி எம்பி சஞ்சய்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே. நாக்பால் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அமலாக்கத்துறை தரப்பினர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ் அரோராவிடம் இருந்து ரூ.3 கோடியை சஞ்சய்சிங் பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால் அக்.10 வரை சஞ்சய்சிங் எம்பிக்கு அமலாக்கத்துறை காவல் வழங்கி உத்தரவிட்டார்.
*மோடி செய்த அநியாயம்
நீதிமன்ற வளாகத்தில் சஞ்சய்சிங் எம்பி கூறுகையில்,’ எனது கைது மோடி செய்த அநியாயம். அவர் தேர்தலில் தோல்வியடைவார்’ என்றார்.