கடந்த ஜூன் மாத துவக்கம் வரையிலும் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்ததால் அந்நேரத்தில் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகமாக இருந்தது. பின், தென்மேற்கு பருவ மழையால் கடந்த வாரம் வரை பூக்கள் வரத்து குறைவானது. கடந்த சில வாரமாக மழை குறைவால், மீண்டும் பூக்கள் வரத்து அதிகரிக்க துவங்கியது. இருப்பினும், விசேஷ நாட்கள் குறைவால், குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.400 முதல் அதிகபட்சமாக ரூ.500க்கே விற்பனையானது.
ஆனால், நேற்று முன்தினம் ஆடி வெள்ளி முதல் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. நேற்று ஆடிப்பெருக்கு மற்றும் இன்று ஆடி அமாவாசை என்பதால், பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதில் மல்லிகை ஒரு கிலோ ரூ.1800 வரையிலும், முல்லை ரூ.1000க்கும், ஜாதி முல்லை ரூ.800க்கும், சம்மங்கி ரூ.300க்கும், சில்லி ரோஸ் ரூ.250க்கும், அரளி ரூ.200 என அனைத்து வகை பூக்களும் கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.