Saturday, September 21, 2024
Home » மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

by Neethimaan


தர்மபுரி: தொப்பூர் அருகே கூலிப்படை ஏவி கணவனை கொலை செய்த மனைவி, மருமகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டி சென்றாயபெருமாள் கோயில் பின்புறம் வசித்து வந்தவர் சிவபிரகாசம் (47). கட்டிட தொழிலாளி. இவருக்கு பொன்னுருவி (37) என்ற மனைவியும், 3 மகள்கள், 16 வயதில் மகன் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் இளைய மகள் மற்றும் மகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். சிவபிரகாசம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து அங்கேயே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தண்டுகாரம்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்ததால் கடந்த 2 நாட்கள் முன்பு 12ம் நாள் காரியத்திற்கு ஊருக்கு வந்திருந்தார்.

வீட்டின் அருகில் மாடு மேய்க்கச் சென்ற சிவப்பிரகாசம் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடைப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் சிவபிரகாசத்தின் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். பொன்னுருவி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்னுருவி கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கொலை செய்ததை நடித்து காட்டினார்.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் பொன்னுருவி வாக்குமூலமாக கூறியதாவது: எனது கணவர் சிவப்பிரகாசம் மது குடித்துவிட்டு விட்டு பல வருடங்களாக எங்களிடம் சண்டை போட்டு வந்தார். எங்களுடைய பிள்ளைகள் யாரிடமும் பேசக்கூடாது எனவும், உறவினர்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது எனவும் கட்டுப்படுத்தி வந்தார். எனது 2வது மருமகன் சிவக்குமாரிடமும் எனது கணவர் மது போதையில் பல நாட்களாக சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் இவரது தொந்தரவு தாங்க முடியாததால், இவரை ஒரு வழி செய்ய வேண்டும் என மருமகன் சிவகுமாரிடம் (28) உதவி கேட்டேன். அதன்படி கூலிப்படையை சேர்ந்த சிவக்குமார், பிரபு மற்றும் திருப்பதி ஆகியோரிடம் சிவப்பிரகாசத்தை கொலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அவர்கள் ₹3.50 லட்சத்திற்கு கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். முதல்கட்டமாக ₹40 ஆயிரம் கொடுத்தேன். கொலைக்கு பிறகு ₹10 ஆயிரம் கொடுத்தோம். மீதி தொகையை தருவதாக கூறினோம். கடந்த 19ம் தேதி எனது கணவர் வீட்டிற்கு வந்தார். நான் கொடுத்த தகவலின்பேரில் வந்த 2 பேர் எனது கணவரை குத்தி கொலை செய்து வீட்டிற்கு அருகில் இருந்த முட்புதரில் வீசிச் சென்று விட்டனர். இவ்வாறு பொன்னுருவி தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சிவகுமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரும் கொலையை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில், கூலிப்படையாக செயல்பட்ட பிரபு(28), திருப்பதி(27), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சிவக்குமாரின் உறவினர்களான முல்லைவேந்தன்(28), முகிலரசன்(23) மற்றும் பொன்னுருவியின் 16 வயது மகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மது குடித்துவிட்டு வந்து தொந்தரவு செய்த கணவனை மனைவி மற்றும் மருமகன் கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய சிவபிரகாசம்
சிவபிரகாசம் ஓசூரில் தங்கி கட்டிட வேலை செய்தபோது, அங்கு ஒருபெண்ணுடன் குடும்பம் நடத்துவதாக பொன்னுருவிக்கு உறவினர்கள் மூலம் தகவல் வந்தது. இதற்கிடையில், ஊருக்கு வரும்போது எல்லாம் மனைவியுடன் சண்டை போடுவாராம். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த போது மனைவி, மகன், மருமகன் என 3 பேரிடமும் சிவப்பிரகாசம் சண்டை போட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த பொன்னுருவி, மருமகன் சிவக்குமாரிடம், கொலை செய்துவிடலாம் என தெரிவித்துள்ளார். கொலை நடந்த இரவு சிவப்பிரகாசம் போதையில் தெருக்கூத்து பார்க்க வந்த போது, கூலிப்படையினர் சுற்றிவளைத்து கைகளை கட்டி குண்டுக்கட்டாக தூக்கி சென்று கொலை செய்து புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi