திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே வாகேரி என்ற கிராமம் உள்ளது. இது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமமாகும். இதனால் புலி, யானை, கரடி உள்பட வனவிலங்குகள் இந்த கிராமத்திற்குள் அடிக்கடி வருவது வழக்கம். இந்நிலையில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரஜீஷ் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் புல் வெட்டுவதற்காக அருகிலுள்ள வயலுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாக திரும்பி வராததால் உறவினர்கள் சென்று பார்த்தபோது அவரது உடல் துண்டு துண்டாக புலி அடித்து சாப்பிட்ட நிலையில் கிடந்தது. புலியை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுத்தால் தான் உடலை அங்கிருந்து கொண்டு செல்ல அனுமதிப்போம் என்று கூறி அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து புலியை சுட்டுப் பிடிக்க கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து வனத்துறையினர் புலியை சுட்டுக் கொல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.