ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் குடிமல்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6-வது மாடியில் உள்ள மருத்துவ பொருட்கள் வைத்திருந்த அறையில் ஏற்பட்ட தீ, பின்னர் மருத்துவமனை முழுவதும் பரவியது. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை கட்டடத்தில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. தீ விபத்தால் பீதியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக நோயாளிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை அமைந்துள்ள 6 மாடி கட்டடம் முழுவதும் தீ பரவியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். 6-வது மாடியில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ மளமளவென பரவியதால் 100 செவிலியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தீ விபத்து காரணமாக மருத்துவமனை அமைந்துள்ள பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.