திருப்புவனம்: அதிமுக மாநாட்டில் பங்கேற்க ஆக. 20ல் மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளளது. மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘வராதே… வராதே… தூங்காநகரத்திற்கு வராதே. முக்குலத்தோர் மக்களையும், சீர்மரபினர் 68 சமுதாய மக்களையும் வஞ்சித்த எடப்பாடியே..
மதுரை மண்ணிற்குள் நுழையாதே…’ என முக்குலத்தோர் தேசிய கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை நேற்று காலையில் சிலர் கிழித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. முக்குலத்தோர் தேசிய கழக மாநில அவைத்தலைவர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘முக்குலத்தோருக்கு கல்வி வேலைவாய்ப்பில் எந்த நன்மையும் செய்யவில்லை. முக்குலத்தோருக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி மதுரை வருவதற்கே தகுதியற்றவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளோம்’’ என்றார்.