ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சரின் மகன், தனது பிறந்த நாளை அரசு மருத்துவமனை வளாகத்தில் வாளால் கேக் ெவட்டி கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் கேபினட் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்த நாள் என்பதால், அவர் தனது ஆதரவாளர்களுடன் ஜெய்ப்பூரில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ரோஹித் ஜோஷின் பிறந்த நாளுக்காக பிரமாண்ட கேக் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு வந்த ரோஹித் ஜோஷி, கூரிய வாளால் தனது பிறந்த நாள் கேக்கை வெட்டினார். அவரை சுற்றி நின்றவர்கள், ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்று பாடல் பாடி ஆட்டம் போட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
மருத்துவமனைக்குள் அமைச்சர் ஒருவரின் மகன் தனது பிறந்த நாளை வாளால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சவாய் மான்சிங் கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன். எவ்வித முன்அனுமதியுமின்றி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.