ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மாடுகள் குறுக்கே ஓடியதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து பாய்ந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து நேற்று புறப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர்-மண்ணூர் சாலையில் நெமிலி அருகே வந்தபோது, திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் ஓடியது. இதனால் டிரைவர், வேகத்தை குறைக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் பேருந்து பாய்ந்தது.
பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் எந்த காயமுமின்றி பயணிகள் அதிஷ்டவசமாக தப்பினர். இதையறிந்ததும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளை மீட்டனர். பின்னர், வேறு பேருந்தில் பயணிகளை அனுப்பி வைத்தனர். தகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் இயந்திரம் பேருந்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.