அரக்கோணம்: அரக்கோணம் அருகே இன்று அதிகாலை சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து இன்று அதிகாலை காலி சரக்கு ரயில் 32 பெட்டிகளுடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு புறப்பட்டது. காட்பாடி, அரக்கோணம் வழியாக அதிகாலை 4.20 மணிக்கு மகேந்திரவாடி ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென கார்டு பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் பெட்டி சிறிது தூரம் பெரும் சத்தத்துடன் இழுத்துச்சென்றது.
இதையறிந்த டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சரக்கு ரயில் லூப்லைனில் தடம் புரண்டது தெரியவந்தது. தொடர்ந்து தடம் புரண்ட சக்கரங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். லூப்லைனில் ரயில் தடம் புரண்டதால் மெயின் லைனில் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.