Sunday, June 30, 2024
Home » ‘தலை’ பொங்கல் பண்டிகை உற்சாகம்; புதுமாப்பிள்ளைக்கு 225 வகை உணவுகளுடன் விருந்து: மாமியார் வீட்டார் அசத்தல்

‘தலை’ பொங்கல் பண்டிகை உற்சாகம்; புதுமாப்பிள்ளைக்கு 225 வகை உணவுகளுடன் விருந்து: மாமியார் வீட்டார் அசத்தல்

by Neethimaan

திருமலை: ‘தலை’ பொங்கலுக்கு வந்த மருமகனுக்கு 225 வகையான உணவு வகைகளுடன் மாமியார் வீட்டார் கமகம விருந்து பரிமாறினர். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு பல வகையான, புதுமையான விருந்து வைத்து அசத்துவார்களாம். மேலும், திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு வரும் மருமகன், திகைக்கும் அளவுக்கு வகை வகையான விருந்து வைத்து பரிமாறுவார்கள். அதன்படி மகர சங்கராந்திக்கு (பொங்கல் பண்டிகை) ‘தலை’ விருந்துக்கு வந்த மருமகனுக்கு 225 வகையான விருந்துகளை பரிமாறி மாமியார் வீட்டார் அசத்தியுள்ளனர்.

அதன் விவரம்: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் ராஜவரம் கிராமத்தை சேர்ந்தவர் காக்கிநாகேஸ்வரராவ்-லட்சுமி தம்பதியின் மகள் ஜோத்ஸ்னா (22). இவருக்கும் விஜயவாடாவை சேர்ந்த லோகேஷ்சாய் (27) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. லோகேஷ்சாய் பெங்களூரில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி ‘தலை’ விருந்துக்கு வருமாறு புதுமண தம்பதியை பெண்ணின் வீட்டினர் அழைத்தனர். அதன்பேரில் லோகேஷ்சாய், மனைவி ஜோத்ஸ்னாவுடன் ராஜவரம் கிராமத்திற்கு வந்தார். நேற்று மருமகனுக்கு, மாமியார் குடும்பத்தினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். மருமகன் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் பல்வேறு வகையான இனிப்பு மற்றும் அறுசுவை விருந்து என 225 வகையான உணவு வகைகளை பரிமாறி விருந்து வைத்தனர்.

மேலும் உணவு வகைகளை மாமனார், மாமியார், மைத்துனர் ஊட்டி புதுமாப்பிள்ளை மகிழ்வித்தனர். இதனை கண்ட மருமகன் லோகேஷ்சாய் என்ன சொல்வதென தெரியாமல் வியப்பில் ஆழ்ந்தார்.இதையறிந்த லோகேஷ்சாயின் தாயார் தீப்தி, தனது மகனுக்கு, அவனது மாமியார் வீட்டில் வழங்கிய உபசரிப்பை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இது எங்களது மாவட்ட மக்களின் வழக்கமான உபசரிப்புதான். இது எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து செய்து வருகிறோம். இந்த விருந்து உபசரிப்பு எங்களது அன்பு, பாரம்பரியம் மற்றும் மரியாதைக்கு சான்றாகும்’ என்றனர்.

You may also like

Leave a Comment

10 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi