போர்வையில் தீப்பிடித்து மாற்றுதிறனாளி பலி


ஆவடி: இரவில் கொசுவத்தி ஏற்றிவைத்து தூங்கியபோது போர்வையில் தீப்பிடித்து மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடியை அடுத்த அண்ணனூர் புதிய அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலா அம்மாள் (64). இவரது மகன் வேல்முருகன் (45). இவர் 2 கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இருப்பினும் இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வேல்முருகன் தனது அறையில் கொசுவத்தியை ஏற்றி வைத்து தூங்கிவிட்டார். இதனைதொடர்ந்து, அவரது போர்வை கொசுவத்தி மீது பட்டவுடன் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டவுடன், மற்றொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த அவரது தாய் கமலா அம்மாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து வேல்முருகனை மீட்டனர். பின்னர், திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேல்முருகனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ரூ.1 லட்சம் லஞ்சம்; மி.வா. அதிகாரிகள் கைது

இம்ரான்கானின் மனைவிக்கு முன்ஜாமீன்

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைதானவர் மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் ஓட்டம்