Sunday, October 6, 2024
Home » பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை

பதின்ம வயது பிள்ளைகளை எளிதாக அணுகும் முறை

by Nithya

நன்றி குங்குமம் தோழி

இன்றைய காலகட்டத்தில் பதின்ம வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை குறித்த கவலையில் இருக்கிறார்கள். அவர்களை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. காரணம், இன்றைய அறிவியல் தொழில்நுட்பம். பிள்ளைகளிடம் நட்புறவை பலப்படுத்துவோம்இன்றைய இளந்தலைமுறை அப்பாவித்தனம், சகிப்புத்தன்மை இழந்துள்ளனர். தேவையில்லாத விஷயங்களை இணையத்தில் கற்றுக் கொள்வதால், வயதுக்கு மீறி சிந்திக்கிறார்கள். எந்த ஒரு சவாலான பிரச்னையையும் நாம் எளிதாகவே அணுகலாம்.

பெற்றோரின் பயத்திற்கான உளவியல் காரணங்கள்

* தாங்கள் சிறுவயதில் செய்த தவறுகளை இவர்களும் செய்வார்கள் என்ற சந்தேகத்தோடு பிள்ளைகளை காண்காணிக்கிறார்கள். அந்த சந்தேகத்தைத் தூர எறிந்தாலே பயம் குறையும்.

* இந்த வயது பிள்ளைகள் அதிகம் விரும்புவது நட்புக்களை மட்டுமே என்பதால் பெற்றோர்கள் அவர்களின் நண்பர்களாக மாற வேண்டும். அவர்களோடு பயணிக்க வேண்டும். அவர்களின் நண்பர்களை பற்றி தெரிந்துகொண்டு நட்பு பாராட்ட வேண்டும்.

* தினமும் பள்ளியில் நடந்த நிகழ்வுகள் நண்பர்களிடையே நடந்த விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய பதின்ம வயது பிள்ளைகள் அதிகளவில் மனச்சிதைவிற்கு உள்ளாகிறார்கள். விளைவு தனிமையை தேடுகிறார்கள். தனிமை தவறு செய்யத் தூண்டும். இவர்களை தனிமையில் விடாமல் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அவர்களின் மனநிலை அறிந்து மனதில் பாசிட்டிவ் விஷயங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த வயதில் ஆண்-பெண் ஈர்ப்பும் நல்ல நட்பாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை தரவேண்டும்.

சுதந்திரத்தின் எல்லைகளை தீர்மானிக்க வேண்டும்

*அவர்கள் சுதந்திரமாக இருக்கும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். கேள்வி கேட்டு சந்தேகம் படாமல் அவர்களை நம்ப வேண்டும்.
*அவர்கள் பொறுப்போடு நடக்கும் போது அதனை அங்கீகரிக்க வேண்டும்.
*அவர்கள் தவறான செயல்களை செய்கிறார்கள் என்பது தெரிய வருகையில் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தி காரணத்தை உணர வையுங்கள்.
* பொறுப்புதான் சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஒரே வழி என்பதை அவர்களுக்கு உணர்த்துவது பெற்றோர்களின் கடமையாகும்.

பிள்ளைகளிடம் பேசுவதோடு கேட்பதும் நன்று

*பதின்ம வயதான பிள்ளைகளோடு எளிதில் தொடர்பு கொள்ளும் தளர்வான உறவுமுறையை அவர்களோடு வைத்துக்கொள்ளுங்கள். எந்த சூழலிலும் அவர்கள் நம்மோடு எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நட்பைப் பலப்படுத்திகொள்ளுங்கள்.

*அவர்களை தனிமைப்படுத்துவது, தனியான பயணத்திற்கு உட்படுத்துவதை தவிர்த்து முடிந்தவரை அவர்களோடு பயணப்படுவது அவர்கள் அருகே அமர்ந்து பேசும் சூழலை உருவாக்கிக் கொள்வதை தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும்.

*அவர்களுக்குப் பேசவும், பொதுவான கேள்விகளைக் கேட்கவும், பதில்களை அளிக்கவும் வாய்ப்பு கொடுங்கள். அவர்களின் ஏதேனும் தவறான நடத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நேரடியாக அவர்களிடம் குற்றஞ்சாட்டுவதை தவிர்த்து அக்குற்றத்தின் பின்விளைவுகளை பற்றிப் பேசலாம்.

பதின்ம வயது பிள்ளைகளை கையாள எளிதான பத்து வழிகள்

*அமைதியான வார்த்தைகளாலும் செயல்களாலும் குழந்தைகளுக்கு சரியானதையும் தவறையும் கற்றுக்கொடுங்கள்.

*அவர்கள் மீது நீங்கள் சந்தேகப்படவில்லை என்பதை அவர்களை நம்ப வையுங்கள்.

* தொடர்ந்து அவர்களை பாராட்டிக்கொண்டிருங்கள்.

* வயது வந்த பிள்ளைகளோடு கண்டிப்பு களை தளர்த்தி நகைச்சுவை உணர்வோடு நடந்து கொள்ளுங்கள்.

* அவசரக் காலத்தில் சரியான முடிவுகளை எடுக்கச் சொல்லி பழக்குங்கள்.

* தோல்வியை பழக்கப்படுத்துங்கள். தோல்விகளையும் புகழ்ந்து பாராட்டி அடுத்த வெற்றிக்கான தன்னம்பிக்கைக் கொடுங்கள்.

* நீண்டநேரம் அவர்கள் தனிமையில் இருக்க அனுமதிக்காதீர். பிள்ளைகளுக்கு சுதந்திரத்தையும் அதேநேரம் நம் கவனத்தை அவர்கள் மீது வைப்பதும் நம் கடமை.

* தவறான செயல்கள் மூலம் வரும் விபரீதங்களின் ஆதாரங்களை இணையத்தின் மூலமாகவோ அனுபவக் கதையாகவோ அவர்களிடம் சொல்வதும் நல்ல பலனைத் தரும்.

* அவர்களின் எல்லா விஷயங்களிலும் தலையிடாமல் அவர்களுக்கான இடத்தை அவர்களிடமே கொடுங்கள்* நீங்கள் சிறந்த நண்பர் என்பதை பிள்ளைகள் நம்பும்படியான நம்பிக்கையை விதையுங்கள்.

ஒரு பெற்றோராக, இந்த சமூகத்தில் உங்கள் பிள்ளைகள் நடந்துகொள்ள கற்றுக்கொடுப்பது உங்கள் வேலைகளில் ஒன்று. இது நேரத்தையும் பொறுமையையும் எடுக்கும் வேலை. ஆனால், பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான ஒழுங்குமுறை உத்திகளை அவர்கள் கற்றுக்கொள்ள இது உதவும்.

தொகுப்பு: மதுரை சத்யா

You may also like

Leave a Comment

16 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi