Thursday, June 27, 2024
Home » மயிலையே கயிலை..கயிலையே மயிலை

மயிலையே கயிலை..கயிலையே மயிலை

by Lavanya

அறுபத்துமூவர் பெருவிழா – 23.3.2024

அறுபத்துமூவர் விழா என்றதுமே, அன்பர்கள், அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்துமூவர் விழாவேயாகும். இது பங்குனி மாதம் உத்திரநாளைக் கடைநாளாகக் கொண்டு, மாலையில், விநாயகர் முன்செல்ல, பெரிய வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும், விமானத்தி பின்னால் கற்பகவல்லியும் பவனிவர, சிங்கார வேலவரான முருகனும், சண்டீசரும் தொடர்ந்து வர, விழா நடைபெறுகிறது. அடியவர்கள் அவரைப் பார்த்த வண்ணமே வீதிகளில் எழுந்தருளுகின்றனர்.

கேடயம் என்னும் சப்பரங்களில் ஒன்றிற்கு நால்வர் நாயன்மார்கள் வீதம் 18 சப்பரங்களில் அவர்கள் பவனி வருகின்றனர். இச்சப்பரங்களுடன் திருஞானசம்பந்தர், அப்பர் சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித் தனியாகப் பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர். இத்தலத்து அடியவரான சிவநேசரும் அவரது மகளும், பாம்பு தீண்டி மாண்டு திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்டவளுமான அங்கம்பூம்பாவையும் தனித்தனியே விமானங்களில் பவனி வருகின்றனர். இவர்களுடன், முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், வாசுகி உடனாய திருவள்ளுவர், திரௌபதி அம்மன் எனப் பல்வேறு தெய்வங்களும் பவனி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து, திருமுருகன் இவ்விழாவுக்கு எழுந்தருளி வீதி வலம் காண்கிறான்.

பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் விழாவாக இது அமைகிறது. விழாவில் தண்ணீர்ப் பந்தல் என்னும் பெயரில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் மக்கள் நன்மைக்காக நீர், மோர், பானகம், புளிசாதம், பொங்கல் முதலான உணவுப் பொருட்கள், பிஸ்கேட், சாக்லெட், மிட்டாய்கள் போன்ற தின்பண்டங்களை அவரவர் சக்திக்கேற்ப வழங்குகின்றனர். குதூகலமான விழாவாக இது அமைகிறது. இவ்விழா நாளின் காலையில், திருஞான சம்பந்தர் பதிகம் பாடி, எலும்பும் சாம்பலுமாக எஞ்சியிருந்த பூம்பாவையை உயிர்ப்பிக்கும் ஐதீக விழா நடத்தப்படுகிறது. அங்கம்பூம்பாவை திருவுருவத்தை விமானத்தில் வைத்து அலங்கரித்து திருக்குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள வைத்து, திரையிட்டு வைத்திருப்பர்.

சிவநேசன் செட்டியார், திருஞான சம்பந்தரை எதிர்கொண்டழைக்கும் நிகழ்ச்சியும், சம்பந்தர் அவ்விடம் வந்து மட்டிட்ட புன்னை எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஓதுவார் அந்தப் பதிகத்தை முழுவதுமாகப் பாடுவார். அத்துடன், பெரிய புராணத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பாக உள்ள செய்யுள்களும் ஓதப்படும். பாடல்கள் முடிந்ததும், திரையை விலக்கி அங்கம்பூம்பாவைக்கு தீபாராதனை செய்யப்படும். அப்போது, அங்கு மண் சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நாட்டுச் சர்க்கரையை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். பின்னர், அங்கம்பூம்பாவை, சிவநேசர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் வடக்கு மாட வீதியாக வலம் வந்து திருக்கோபுர வாயிலில் நிற்பர். பிற்பகல் இவர்களுக்குக் கபாலீஸ்வரர் காட்சி கொடுக்கும் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்தே அறுபத்துமூவர் விழா கொண்டாடப்படுகிறது.

அறுபத்துமூவர் வரலாற்றுக்கு ஆதாரமானவை

சைவம் போற்றும் அறுபத்துமூன்று அடியவர்களின் வரலாற்றுக்கு அடிப்படை நூல்களாக இருப்பவை மூன்றாகும். அவை, சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச் செய்த “திருத்தொண்டத் தொகை’’, திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த “திருத்தொண்டர் திருவந்தாதி’’, சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த “பெரியபுராணம்’’ என்பனவாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே அடியவர்களைப் போற்றும் வகையில், எண்ணற்ற நூல்கள் வெளியாகியுள்ளன. திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் அடியவர்களின் பெயரை மட்டுமே வரிசைப்படுத்திக் கூறி, அவர்தம் அடியார்க்கும் அடியேன் என்று போற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து வந்த நம்பியாண்டார் நம்பிகள், பொள்ளாப் பிள்ளையார் மூலமாக உணர்த்தப் பெற்று திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள அடியவர்களின் ஊர், மரபு, அருட்செயல் ஆகியவற்றைக் கூறும் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை அருளிச் செய்துள்ளார்.

சேக்கிழார் சுவாமிகள் சுந்தரரின் திருத்தொண்டத் தொகையையும் நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டத் திருவந்தாதியையும் ஆதாரமாகக் கொண்டும், தன்னுடைய அளவற்ற ஆர்வத்தால் ஆராய்ந்து தெளிந்த செய்திகளைக் கொண்டும், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணத்தைப் பாடி அருளினார். அதில் அறுபத்துமூன்று அடியவர்களின் வரலாறும் தொகையடியார்கள் இயல்பும் சிறப்புடன் விரித்துரைக்கப்பட்டுள்ளன.அன்பர்கள், திருத்தொண்டர் தொகைப் பாசுரத்தைத் தொகைநூல் என்றும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியினை வகைநூல் என்றும், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்தை விரிநூல் என்றும் வழங்குகின்றனர்.

கல்வெட்டு கூறும் அறுபத்துமூவர் பெற்ற பேறு

முன்னாளில், திருக்கோயில்களில் பூசைகள் தடையின்றிச் சிறப்பாக நடைபெறவும், திருவிளக்கேற்றவும், அமுது படைக்கவும், அன்பர்கள் நிலமாகவும், பொற்காசுகளாகவும், ஆடு மாடுகளாகவும் கொடைகளை வழங்கி நிவந்தங்களை ஏற்படுத்தியிருந்தனர். தம்முடைய அரசனின் வெற்றிச் செய்திகளுடன் தாமளித்த அந்த தானத்தைப் பற்றிய விளக்கமான செய்திகளையும், ஆலயச் சுவர்களில் கல்வெட்டாகப் பொறித்து வைத்தனர். அப்படி அளிக்கப்பட்ட தானச் செய்திகளின் முடிவில், இந்த தர்மத்தை, சூரிய சந்திரர் இருக்கும் வரை நடத்த வேண்டும் என்றும், அப்படிப் பாதுகாப்பவர் பெறும் புண்ணியங்கள் இவை என்றும், தர்மத்தினை அழித்தவர்கள் அடையும் பாவம் இன்ன இன்னதென்றும் பட்டியலிட்டுக் குறித்து ஆணை வைத்துள்ளனர்.சூரியசந்திரருள்ள வரை தர்மத்தை ரட்ப்பவர்கள் பாதம், தன் தலைக்கும் மேலானதென்றும், அவர்கள் பல செல்வங்களைப் பெற்று வாழ்வார்கள் என்றும், கோடிபுண்ணியம் அடைவார்கள் என்றும் குறித்திருப்பதைக் காண்கிறோம். இதுபோல், அந்த தர்மத்தினை அழித்தவர்கள் நரகம் புகுவார்கள் என்றும், கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தைக் கொள்வரென்றும் பலவாறு சாபம் மொழிந்திருப்பதைக் காண்கிறோம்.

கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசி வட்டம், கஞ்சப்பள்ளி என்னும் ஊரிலுள்ள தேனீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவகாமி அம்மனுக்குத் திருவிளக்கு, அபிஷேகம், நெய்வேத்தியம் (நிவேதனம்) ஆகிவற்றிற்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தி அக்கோயிலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தப் பூசைகளை நடத்திச் சந்நதியைப் பரிபாலித்து வருபவர்கள் அறுபத்துமூவர் பெற்ற பேறு பெறுவார்கள் என்றும், மொழியப்பட்டுள்ளது.இதில் இந்த தருமம் காப்பவர் அறுபத்துமூவர் பெற்ற பேறு பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது, சிந்திக்கத்தக்கதாகும். செம் பொருளான சிவபெருமானின் திருவடிக்கீழ் வீற்றிருக்கும் இன்பமே பேரின்பம் அத்தகைய பேரின்பத்தை அடைந்து திளைத்துக் கொண்டிருப்பவர்களே அறுபத்துமூவர். அதனால், அவர்கள் பெற்ற பேறே பெறுதற்கரிய ஒப்பற்ற பேறாகும்.அதனால்தான் இந்த தர்மம் காப்பவர், அத்தகைய பேற்றைப் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. இது வேறெங்கும் பொறிக்கப்படாத அற்புத ஆணை மொழிகளாகும். இவை தன்னைப் பொறித்தவர் அறுபத்து மூவர் மீது கொண்டிருந்த பற்றை உலகிற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

காட்சிக் கொடுத்த நாயகர்

சிவபெருமான் அடியவர்கள் செய்யும் திருத்தொண்டினாலும், அவர்கள் தம் மீது கொண்டிருக்கும் மாறா அன்பினாலும் மகிழ்ந்து அவர்களுக்கு அருள்புரிய வருகின்றான். அப்படி வருபவன் தனித்து வராமல் இமயவல்லியாகிய உமாதேவியுடன் அழகிய வெள்ளிப் பனிமலை போல் விளங்கும் விடை வாகனத்தில் வருகின்றான். அப்படி வரும் கோலமே “காட்சி கொடுத்த நாயகர்’’ என்று அழைக்கப்படுகின்றது. பெரியபுராணத்தில் இறைவன், அன்பர்களுக்கு முன்தோன்றி அருள்புரியும் காட்சிகளில் எல்லாம் காட்சி கொடுத்த நாயகராகவே தோன்றி அருள்புரிவதை காண்கிறோம். சேக்கிழார் பெருமான் இதனை சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தை நிறுத்தித் தடுத் தாட்கொண்டு திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்துச் சென்று அங்கு அருள் செய்த போது,

“மாதோடு உம்பரின் விடைமேல் தோன்றி’’ என்றும்,
திருநீலகண்ட நாயனார் புராணத்தில்;
“துன்னி விசுமின்ஊடு துணையுடன் விடைமேல் தோன்றி’’ என்றும்
இயற்பகையார் புராணத்தில்;
“பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல்
பொலிந்தது என்ன தன்துணையோடே வானினில்
தலைவனை விடைமேல் கண்டார்’’ என்றும்
இளையான்குடி மாறனார் புராணத்தில்;
“ஏலவார்குழலாள் தன்னோடு இடபவாகனாய் தோன்றி’’ என்றும்’
அமர்நீதி நாயனார் புராணத்தில்;
“விசும்பினில் பாகம் கொண்ட பேதையும் தாமுமாய்க்காட்சி கொடுத்ததருளினார்’’ என்றும்,

அடியவர்கள் வரலாற்றில் சிவபெருமான் விடைமேல் தோன்றிக் காட்சியளித்ததைக் கூறிப் போற்றியுள்ளார். இதையொட்டி ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள அறுபத்துமூவர் வரிசையின் இறுதியில் சிவபெருமானைக் காட்சியினைக் கொடுத்த நாயகர் கோலத்தில் அமைத்துள்ளனர். பெரும்பாலான தலங்களில் இடபத்தின் மீது சிவபார்வதியரை அமைக்காமல், சிவனும் பார்வதியரும் நிற்க, அவர்களுக்குப் பின்புறம் இடபம் நிற்பதாகக் காட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் வலது முன்கரத்தில் அபயமுத்திரை தாங்கி இடது முன் கரத்தைத் தொடை மீது வைத்துள்ளார். பின் கரங் களில் மான், மழு உள்ளன. அவரது இடப் பாகத்தில் அம்பிகை நிற்கிறாள்.

சோழநாட்டுத் தலங்கள் பலவற்றில் இத்தகைய காட்சிக் கொடுத்த நாயகரை அறுபத்துமூவர் வரிசையின் இறுதியில் காண்கிறோம். சில தலங்களில் உலாத் திருமேனியாகவும் காட்சிக் கொடுத்த நாயகர் எழுந்தருளி உள்ளார். தாராசுரம் ஐராவதேசுவரர் ஆலயத்தில், செதுக்கி அமைக்கப்பட்டுள்ள அறுபத்துமூவர் வரலாறு தொடர் சிற்பத்தில் நாயன்மார்களுக்குப் பெருமான் உமையுடன் விடை மேலிருந்தவாறு அருள்புரியும் கோலம் சிறுசிறு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. புரிசையிலுள்ள அறுபத்துமூவர் சிற்பங்களிலும் உமையுடன் விடைமேல் தோன்றி அருள்புரிந்து கொண்டிருக்கும் பெருமானைக் கண்டு மகிழ்கிறோம்.குடுமியான் மலையில் நெடுந்தொடராக ஒரே வரிசையில் செதுக்கி அமைக்கப்பட்டுள்ள அறுபத்துமூவர் திருவுருவங்களுக்கு நடுவில் விடையின்மேல் உமையுடன் சிவபெருமான் அமர்ந்திருக்கும் கோலத்தையும் புடைப்புச் சிற்பமாக அமைத்துள்ளனர்.

இக்கருத்துக்களையொட்டி, சில ஆலயங்களில் இடப வாகனக் காட்சியன்று அறுபத்துமூவர் விழாவை நடத்துகின்றனர். திருச்சி தாயுமானவ சுவாமி, சென்னை மல்லீசுவரர், நெல்லை நெல்லையப்பர் முதலான ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாவில், இரவு நடக்கும் ரிஷப வாகன சேவையின் போது, அறுபத்து மூவர் விழா நடத்தப்படுகின்றது. சென்னை மல்லீசுவரர் ஆலயத்தில் தங்க ரிஷபத்தில் பெருமான் பவனி வர, அறுபத்து மூவரும் தரிசித்தவாறே வரும் காட்சி காண்பதற்கு இனியதாக அமைகின்றது. இதுபோன்று பல இடங்களில் இடப வாகனக் காட்சியுடனேயே அறுபத்துமூவர் விழா நடைபெறுவதைக் காண்கிறோம்.

இறைவன் சில அடியவர்களுக்குக் காட்சிதர மானுடவடிவம் கொண்டு வந்ததையும் குறித்துள்ளனர். அவ்வேளையில் அவர் இரண்டு கரங்களுடன் வந்துள்ளார். அதை நினைவூட்டும் வகையில் அவரை இரண்டு கைகளோடே அமைத்துள்ளனர். சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட காட்சிக் கொடுத்த நாயகர் வடிவங்கள் இரண்டு கைகளுடன் திகழ்கின்றனர். நாகப்பட்டினம், திருவாரூர் முதலிய பழம்பெரும் தலங்களில் இரண்டு கரங்களுடன் விலங்கும் காட்சி கொடுத்த நாயகரை காண்கிறோம். பின்னணியில் இடபம் நிற்க, இடது பக்கம் உமை நிற்கின்றாள். பெருமான் சடைகளை வட்டணையாக முடித்துள்ளார். இக்கோலம் காணக்கிடைக்காத கவின்மிகு கோலமாகும்.

ஆட்சிலிங்கம்

You may also like

Leave a Comment

20 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi