தஞ்சாவூர்: தஞ்சாவூர் பேராவூரணி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் கணவனும், காப்பாற்ற முயன்ற மனைவியும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மிதியக்குடிக்காடு கிராமத்தில் இன்று 2ம் தேதி அதிகாலை சுமார் 3 மணிக்கு இயற்கை உபாதையை கழிக்க வீட்டுக்கு வெளியே வந்த போது மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த உடையப்பன் , சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி சம்பூரணம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரது உடல்களையும் பேராவூரணி போலீஸார் கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.