கொள்ளிடம் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் அடியோடு முறிந்தது

*கிராம மக்கள் வேதனை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே பன்னீர் கோட்டகம் கிராமத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் அடியோடு முறிந்து விழுந்தது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பன்னீர் கோட்டகம் கிராமம் வழியாக பிரதான தெற்கு ராஜன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வலது கரையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்து வந்தது. இது கடந்த 5 வருடங்களுக்கு முன் அதிக கிளைகளுடன், பார்ப்பதற்கு மிகவும் பெரிய மரமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் மரங்களின் கிளைகள் சிலரால் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஆலமரத்தில் உள்ள இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட தொடங்கின.

இந்நிலையில் நேற்று இம்மரத்தின் அடிப்பகுதியில் திடீரென முறிவு ஏற்பட்டு கீழே சாய்ந்தது. பொதுவாக ஆல மரங்கள் வளர வளர மரங்கள் கீழே சாயாமல் இருக்க விழுதுகள் கிளை வழியே வந்து மண்ணில் பட்டு தாங்கி நிற்பது வழக்கம். ஆனால் இங்கு வளர்ந்து வரும் விழுதுகளை அவ்வப்போது இளைஞர்கள் மற்றும் சிலர் அகற்றியதன் காரணமாகத்தான், இந்த மரம் விழுவதற்கு முன் தாங்கி நிற்கக்கூடிய விழுதுகள் இல்லாமல் போனது. இதனால் இந்த ஆலமரம் திடீரென நேற்று முறிந்து கீழே விழுந்தது.

ஆல மரங்கள் பொதுவாக வேர் பகுதிக்கு சற்று மேல் முறிந்து விழுவது அபூர்வம் என்றும், அடிப்பகுதியில் மரம் பாதிக்கப்பட்டு மக்கிய நிலை ஏற்பட்டதால் முறிந்து விழுந்துள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். ஊருக்கு அடையாளமாக இருந்த மரம் முறிந்ததால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை