* தலித் மக்கள் முன்னணி நிர்வாகி கைது* ஆர்.கே.பேட்டை அருகே போலீஸ் குவிப்பால் பரபரப்புபள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே ராஜாநகரம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் 100 ஆதிதிராவிடர்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அதே பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கிய இலவச வீட்டுமனையில் வீடுகளை கட்டி கொண்டு குடியேற கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா பெற்ற பயனாளிகள் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இதுதொடர்பாக கிராமத்தில் இரு சமுதாய மக்களிடையே தொடர்ந்து பிரச்னை நிலவுகிறது. இந்நிலையில் நேற்று முதலமைச்சரை சந்திக்க தலித் மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு தலைமையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்னைக்கு நடை பயணம் செல்ல திட்டமிட்டிருந்தனர். அனுமதியின்றி கோட்டை நோக்கி செல்ல போலீசார் தடை விதித்த நிலையில் திருத்தணி டி.எஸ்.பி. இரவிச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ராஜாநகரம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேநேரத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திருத்தணியில் தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கோட்டையை நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற கிராமமக்களுடன் திருத்தணி கோட்டாட்சியர் சத்தியா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 15 நாட்களில் இலவச வீடு மனை பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை ஏற்று கோட்டை நோக்கி நடைபயணம் திட்டத்தை கைவிட்டனர்….