மதுரை: ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆவின் அலுவலகங்களில் கடந்த ஆட்சி காலத்தில் புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனங்கள் குறித்து சென்னை ஆவின் தலைமை அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்த தகவலை ஆவின் நிறுவனம் தமிழக அரசுக்கு அனுப்பியது. அதில் தெரிவித்தாவது, கடந்த ஆட்சி காலத்தில் தகுதி வாய்ந்த நபர்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் விருப்பத்தின் பெயரில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. பால் ஒன்றிய கூட்டுறவு அலுவலகங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய பால்வள கழகம் மற்றும் மாநிலத்தின் உயர்நிலை குழு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரணைக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் உத்தரவிட்டதன் பெயரில், ஆவினில் முறைகேடாக நிரப்பப்பட்டதாக 500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் மதுரை ஆவின் பணி நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. …