Sunday, September 29, 2024
Home » தமிழகம், கர்நாடகாவில் இருந்து கடல் வழியாக கனடா செல்ல முயன்ற 23 இலங்கை தமிழர்கள் கைது..!!

தமிழகம், கர்நாடகாவில் இருந்து கடல் வழியாக கனடா செல்ல முயன்ற 23 இலங்கை தமிழர்கள் கைது..!!

by kannappan

மதுரை: தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கடல் வழியாக கனடா செல்ல முயன்ற இலங்கை தமிழர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து இலங்கை தமிழர்கள் சிலர் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மதுரை புறநகர் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருந்த போலீசார், அங்கு பதுங்கி இருந்த 23 இலங்கை தமிழர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக கள்ளத்தோணியில் தமிழகம் வந்திருப்பது தெரியவந்தது. 
அதுமட்டுமின்றி மதுரை வழியாக கேரளா தப்பிச்செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. இலங்கை தமிழர்கள் 23 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கள்ளத்தனமாக கனடா செல்ல ஏற்பாடு செய்த ஏஜெண்டுகள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் தமிழக போலீசார் அளித்த தகவலின் படி கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் 44 இலங்கை தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர். 
இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் வந்த இவர்கள், பாதுகாப்பு கருதி தூத்துக்குடியில் இருந்து மங்களூருவுக்கு சென்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மங்களூருவிலேயே முடங்கி கிடந்த 44 பேரும் மீண்டும் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கனடா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 44 பேரையும் கைது செய்துள்ள கர்நாடக மாநில போலீசார், அவர்கள் சட்டவிரோதமாக பாஸ்போர்ட் இல்லாமல் செல்ல உதவிய ஏஜெண்டுகளை தேடி வருகின்றனர். 

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi