சென்னை: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நாளை சீராய்வு கூட்டம் நடைபெறும் என்றும் இணை ஆணையர்கள் புள்ளிவிவரங்களுடன் வர வேண்டும் எனவும் இந்து அறநிலையத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை உள்ளிட்ட 24 அம்சங்கள் குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை: நாளை (12ம் தேதி) காலை 10 மணிக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு பொருண்மைகள் தொடர்பான சீராய்வு கூட்டம் நடைபெறும். திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல், யானைகள் பராமரிப்பு, அறங்காவலர் நியமனம் மற்றும் மாவட்ட குழுக்கள், திருக்கோயிலில் காலிப்பணியிடங்கள் நிரப்புதல், நிலங்கள் தொடர்பான சொத்துப்பதிவேடு அங்கீகாரம் மற்றும் பதிவேற்றம் செய்தல், நியாய வாடகை நிர்ணயம், தமிழ் நிலம் ஒப்பீடு செய்தல், குடமுழுக்கு முடிந்து 12 ஆண்டுகள் முடிவுற்றுள்ள முதுநிலை திருக்கோயில் மற்றும் முதுநிலை அல்லாத திருக்கோயில் விவரம் உள்ளிட்ட துறையின் பல்வேறு புள்ளி விவரங்களை அனைத்து இணை ஆணையர்களும் தத்தம் பிரிவின் கீழ்வரும் துணை ஆணையர்/ உதவி ஆணையர் செயல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமிருந்து பெற்று தொகுக்கப்பட்ட விவரங்களுடன் கூட்டத்திற்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. …