புதுக்கோட்டை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருவது நிம்மதியளிக்கிறது என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ, மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வருகிறது. 36 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று, தற்போது 25 ஆயிரத்திற்கு குறைந்திருப்பது நமக்கு சற்று நிம்மதி அளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பப்படி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எடுக்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்….