சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னை உள்நாட்டு விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக குறைய துவங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சகஜ நிலைக்கு திரும்புகிறது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் பீதியால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. இதனால் விமான சேவைகளும் பெருமளவு குறைக்கப்பட்டது. ஒரு நாளுக்கு 60 லிருந்து 70 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. அந்த விமானங்களில் சுமார் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் தினமும் 80லிருந்து 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கடந்த இரு தினங்களாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். நேற்று புறப்பாடு விமானங்கள் 42, வருகை விமானங்கள் 41 என 83 விமானங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல் பயணிகள் எண்ணிக்கையும் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இரு நாட்களாக விமான பயணிகள் அதிகரித்து, விமானத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது விமானநிலைய வட்டாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று வெகுவாக குறைந்து ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவிக்கும்பட்சத்தில், சென்னை விமான நிலையம் வழக்கமான நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….