பெரம்பூர்: கொளத்தூர் சிலந்தி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மகாலட்சுமி ஐசிஎப்பில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன்கள் மோனிஷ் (23), சுஜன் (18). இதில் மோனிஷ், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் 4 பேப்பர் அரியர் வைத்திருந்துள்ளார். இவற்றில் விரைவில் தேர்ச்சி பெற வேண்டும், என பெற்றோர் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி அளவில் பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் அவரது சகோதரர் சுஜன் என்பவரும் கல்லூரிக்கு சென்று விட்டார். வீட்டில் மோனிஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். கல்லூரிக்கு சென்ற சுஜன் மாலையில் வீடு திரும்பியபோது, அவரது அறையில் அண்ணன் மோனிஷ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மோனிஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.