* குண்டும், குழியுமாக உள்ள மண் சாலை* விவசாயிகள் கடும் பாதிப்புதங்கவயல்: நதிகளை பாழ்படுத்தி மணல் கொள்ளை நடத்தியவர்கள், தற்போது மண் சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. இதுகுறித்து புகார் செய்தால் அதிகாரிகள் மவுனமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பணியாற்றிய கே.சி.ரெட்டி பிறந்த கிராமம், தங்கவயல் அடுத்த கேசம்பள்ளியில் உள்ளது. அக்கிராமத்தை ஒட்டி பெரிய ஏரி உள்ளது. கர்நாடகா-ஆந்திரா மாநில எல்லை வரை ஏரியை ஒட்டி மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் தரமான மணல் இருப்பதை கண்டுபிடித்துள்ள மாபியா கும்பல், இரவு நேரத்தில் மாட்டு வண்டி, டிராக்டர்கள் மூலம் சாலையில் பள்ளம் தோண்டி மணல் எடுத்து செல்கிறார்கள். மாபியா கும்பலின் செயலால் மண் சாலை கண்ணோக்கி பார்க்கும் இடமெல்லாம் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அவர்களின் அட்டகாசம் விவசாயிகளை வெகுவாக பாதிக்கிறது. கேசம்பள்ளி ஒன்றியத்திற்கு உள்பட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்யும் தக்காளி, பீன்ஸ் உள்பட தோட்டக்கலை பயிர்களை தங்கவயல், சாந்திபுரம், குப்பம், வி.கோட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். மண் சாலையில் பள்ளம் விழுந்துள்ளதால், மாட்டு வண்டியோ அல்லது டிராக்டரோ எடுத்துச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சாலைகளில் பள்ளம் தோண்டி மணல் எடுக்கும் மாபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் அதிருப்தி வெளிப்படுத்தினர்….