சென்னை: திமுக சார்பில் கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி வழங்க அனுமதி தருமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் நேரம் மட்டுமல்ல, எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் திமுக. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை திமுக நிறைவேற்றியது. திமுக-வின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்று தொண்டாற்றினர். இந்நிலையில் திமுக சார்பில் கபசுர குடிநீர், முகக்கவசம், ஆகியவற்றை வழங்க அனுமதி தருமாறு தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவ திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதித்த ஒரு கோடி பேருக்கு மேல் ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கத்தின் கீழ் உதவிகள் செய்தோம். தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்குதலின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உத்தரவு ஒன்றினையும் நேற்று பிறப்பித்துள்ளது. தற்போது தமிழக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி கொரோனாவை எதிர்கொள்ள கபசுர குடிநீர், கிருமிநாசினி, முகக்கவசங்களை வழங்கப்பட வேண்டியுள்ளது. ஆதலால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சித்த மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க வசதிகளாக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது….