கோலார்: மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியை 100 சதவீதம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். திட்டம் செயல்படுத்தாமல் நிதி வாபஸ் செல்லும் சூழ்நிலை ஏற்படுத்தக்கூடாது என்று கலெக்டர் ஆர்.செல்வமணி உத்தரவிட்டார். மாநில அரசின் சார்பில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் கோலார் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த ஒதுக்கீடு செய்த நிதியில் மேற்கொண்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து பரிசீலனை கூட்டம் கலெக்டர் ஆர்.செல்வமணி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்கள் துறைகள் மூலம் மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவரம் தெரிவித்தனர். குறிப்பாக அனைத்து துறையிலும் சிறப்பு பிரிவு திட்டம் (எஸ்சிபி) மற்றும் பழங்குடியின துணை திட்டம் (டிஎஸ்பி) திட்டத்தில் மேற்கொண்டுவரும் திட்டங்கள் குறித்து விவரம் பெற்றார்.அதை தொடர்ந்து கலெக்டர் பேசும்போது, “மாநில அரசின் சார்பில் எஸ்.சி.பி மற்றும் டிஎஸ்பி திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியம் 39 துறைகளிலும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் உண்மையான பயனாளிகள் பலனடைய வேண்டும். எஸ்.சி.பி மற்றும் டிஎஸ்பி திட்டங்கள் செயல்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யும் மானியம் பயன்படுத்துவதற்கு முன் துறை அதிகாரிகள் அமர்ந்து திட்டமிட வேண்டும். பின் சமூகநலத்துறையின் செயலி மூலம் ஒவ்வொரு மாதமும் திட்ட செயல்பாடுகள் தொடர்பான பதிவுகள் வெளியிட வேண்டும். கடந்த நிதியாண்டுகளில் எஸ்.சி.பி மற்றும் டிஎஸ்பி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த மானியம் முழுமையாக செயல்படுத்தாமல், நிதியாண்டு இறுதியில் மாநில அரசுக்கு வாபஸ் சென்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டுமில்லாமல், வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யும் மானியமும் அரசுக்கு வாபஸ் செல்லாமல் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் முழு கவனம் செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்….