திருப்பூர் : திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் வீடுகளில் ஒட்டியிருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தியதால் அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்.திருப்பூர் செல்லாண்டியம்மன் துறையில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போராரு என்ற வாசகத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படம் பதித்த ஸ்டிக்கர்கள் ஓட்டியிருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஸ்டிக்கர்களை நேற்று அப்புறப்படுத்தினர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுகவினர் ஒன்று கூடி மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மாநகராட்சி கமிஷ்னரிடம் புகார்: திருப்பூர் திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் விவேகானந்தம் நேற்று மாநகராட்சி கமிஷ்னரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:திமுக தொண்டர்களின் வீடுகளில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்க்கு முன்பே அவரவர் விருப்பத்தின் பேரில் வீடுகளில்உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை ஓட்டினர். கடந்த இரண்டு நாட்களாக மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஸ்டிக்கர்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதாக அறிகிறேன். இந்த ஸ்டிக்கர்கள் ர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்களை அகற்றும் செயலானது எங்கள் கட்சியின் சின்னத்தை தேர்தல் நேரத்தில் முடக்குவதாகவும், ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் நடப்பதாக அறிகிறேன். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். இத்தகைய செயல் மேற்கொண்டு நடக்காமல் தடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்….