சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 1,796 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பிரசாரம் செய்வது, மற்றும் அதிக ஒலி எழுப்பும் கருவிகள் பயன்படுத்துவது, கொடிகள், பேனர்கள் வைப்பதை கண்காணிக்க தேர்தல் ஆணையம் மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கு 9 தனிப்படைகள் தலைமையில் 108 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரம் செய்யும் பகுதிகளில் இந்த தனிப்படைகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் நேற்று வரை தேர்தல் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது 139 வழக்குகள் அந்தந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளின்படி நேற்று வரை அவரவர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 1,796 துப்பாக்கிகள் ஒப்படைத்துள்ளனர். அதேபோல், குற்றப்பின்னணி உள்ள 34 முக்கிய ரவுடிகள் நேற்று வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பிணையுடன் உள்ள 1,751 குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்….
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை காவல் நிலையங்களில் 1,796 துப்பாக்கிகள் ஒப்படைப்பு: விதி மீறியதாக 139 வழக்கு
previous post