சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் கோயிலில் பக்தர்களுக்கு அத்துமீறல் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் கூறினார்.பொதுமக்களுக்கு குறைகள் இல்லாமல் அத்துமீறல் இன்றி நிர்வாகம் நடத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆதாரப்பூர்வமாக எடுத்து வருகிறோம். கோயில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தியுள்ளார். அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேர சேவை மையத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார். நான் ஏற்கெனவே கூறியது போல், கோயிலை அரசு எடுத்து நடத்தும் வகையில், நாங்கள் எங்களது செயலை முடுக்கிவிடவில்லை. ஆனால், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டு வரக்கூடிய கோயில் என்பதால், அங்கு நடைபெறக்கூடிய நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டும் என்பதுதான் இந்துசமய அறநிலையத்துறையின் மேலான எண்ணம்.தமிழக முதல்வர் சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். சட்டத்தை மீறிய செயல்கள் எங்கு நடந்தாலும் அதை கட்டுப்படுத்த, அதை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும் என எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். நாங்கள் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். …