Friday, September 20, 2024
Home » திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி- பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி- பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்

by kannappan

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை நூற்றாண்டு பழமையானது. இம்மருத்துவமனைக்கு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தலைஞாயிறு, வேதாரண்யம், கோட்டூர் ஒன்றியங்களை சேர்ந்த நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் நூற்றுகணக்கில் தினமும் வந்து செல்கின்றனர், ஆரம்பத்தில் ஆண், பெண் என தனித்தனி மருத்துவமனையாக செயல்பட்டது அப்போது 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்தனர். தற்போது ஒரே மருத்துவமனையாக செயல்படுகிறது. அறுவை சிகிச்சை கூடம், இரத்த வங்கி, டயாலிசிஸ் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் சிகிச்சை வசதிகள், போதிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாததாலும் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் ஏழை நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது ரூபாய் ஒன்பது கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்திலும், பழைய ஆண்கள் மருத்துவமனை மற்றும் பெண்கள் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்களை கட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ளதுபோல் அனைத்து உயர் சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், அனைத்து சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தி தேவையான மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரியினையும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ரூ.25 லட்சத்தில் ரத்த வங்கி சேமிப்பு கட்டிடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அரசு மருத்துவமனை இயக்கும் கட்டிடம் கட்டி 21 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனை கருத்தில்கொண்டு அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ மாரிமுத்து சட்டசபையில் பேசியதுடன், தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார். இதனையடுத்து தமிழக அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது அரசு மருத்துவமனையின் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் 2,184 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளங்களில் அமையவுள்ள சிறு அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சை பிரிவு, நுண்கதிர் பிரிவு. சி.டி.ஸ்கேன், அறுவை சிகிச்சைக்கு முன் மற்றும் பின் கவனிப்பு அறை, மருத்துவ வார்டு மற்றும் செவிலியர் அறை ஆகியவற்றுடன் கூடிய அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் கூறுகையில், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனை 74 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. நகர நடுப்பகுதியில் ஆண்கள் மருத்துவமணை தனியாகவும், பெண்கள் மருத்துவமனை தனியாகவும் இயங்கி வந்தது. பொதுமக்கள் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையை விரிவுபடுத்த வேதாரண்யம் சாலையில் சந்தைப்பேட்டையில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தை வாங்கி அரசு மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தாலுகா முழுவதிலும் இருந்து அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இதனால் மேலும் கட்டிடம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது ரூ.25 லட்சத்தில் ரத்த சேமிப்பு வங்கி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஒன்பது கோடி மதிப்பீட்டில் தனியாக கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் அதிநவீன சிகிச்சை அறை நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதியுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.80 லட்சத்தில் நோயாளிகளுடன் வரும் உதவியாளர் தங்குவதற்கு 60 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிடம் நிறைவுபெற உள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரியது.ரத்த வங்கி, சிடி ஸ்கேன் பரிசோதனை ஆகியவை பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.மாவட்ட மருத்துவமனை அளவுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் நோயாளிகள் பெற வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வாகன விபத்துகளில் காயம்அடைந்தவர்கள் உடனடி சிகிச்சைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.தற்போது நவீன அறுவை சிகிச்சை பிரிவும், சிடி ஸ்கேன் பிரிவும் அமைக்கப்பட்டு வருவதால் மாவட்ட மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படப்போவதில்லை. இதனால் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழக அரசு சுகாதாரத்துறையை பொதுமக்கள் மிகவும் பாராட்டுகின்றனர் என்றார்….

You may also like

Leave a Comment

eleven − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi