ஊட்டி : ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நேற்று குறைந்த பட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். துவக்கத்தில் ஒரு மாதம் நீர்பனி விழும். அதனை தொடர்ந்து, உறைபனி விழும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இது போன்ற சமயங்களில் வெப்பநிலை ‘0’ டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர்நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டிக் கிடக்கும். ஆனால், இம்முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த இரு மாதங்களாக நீர் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. அதேசமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்துவங்கியுள்ளது. நேற்று ஊட்டியில் அதிக பட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்.பி.எப்., போன்ற பகுதிகளில் நீர்பனி அதிகமாக காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் லேசான உறைபனியும் விழத் துவங்கியுள்ளது. பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் குளிரால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலை நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். குளிரை தாக்குப் பிடிக்காத பெரும்பாலான உள்ளூர் மக்கள் மாலை நேரங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்….