நெய்வேலி : நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் கசித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தில் என்எல்சி நிரந்தர ஊழியர்கள், இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம் நான்கு இன்கோசர்வ் தொழிலாளர்கள் மற்றும் ஒரு நிரந்தர தொழிலாளர்கள் பாய்லர் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.அப்பொழுது, அப்பொழுது, அங்கு பணியில் இருந்த நெய்வேலி அடுத்த வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் திருநாவுக்கரசு(47), வீரசிங்ககுப்பம் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் தட்சிணாமூர்த்தி(54), ஊத்தங்கல் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் செல்வராஜ்(47), நெய்வேலி வட்டம்-5 பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் சுரேஷ்(47), வடலூர் அடுத்த கோட்டகம் கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் செந்தில்குமார்(45) ஆகிய 5 தொழிலாளர்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தீக்காயமடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த திருநாவுக்கரசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக என்எல்சி நிறுவன தலைவர் ராகேஷ்குமார், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று தீ விபத்தில் காயமடைந்த உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.மேலும் மருத்துவரிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். புதிய அனல் மின் நிலையத்தில் பாய்லர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….