கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக சுமார் 500 ஏக்கர் நிலங்களில் மண்சரிவு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் கடும் குளிர் நிலவி வருவதுடன், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.அதேநேரம், இந்த தொடர் மழை கொடைக்கானல் பகுதி விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 500 ஏக்கர் நிலங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக அப்பகுதி விவசாயிகள், தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ், கேரட், வெள்ளைப்பூண்டு போன்ற பயிர்கள் தொடர் மழைக்கு சேதமடைந்துள்ளன. இதுபோல் பனிக்காலத்தில் பயிரிடப்படும் பட்டாணி போன்ற பணப்பயிர்களை விளைவிக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கொடைக்கானலில் மண்சரிவால் சுமார் 500 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டு, பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினால் மட்டுமே அடுத்தகட்ட சாகுபடி செய்யும் நிலை உள்ளது. எனவே விளைநிலங்களில் கிடக்கும் மண்சரிவுகளை அப்புறப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் கால இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….