வருசநாடு: வருசநாடு அருகே, மஞ்சனூத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே மஞ்சனூத்து மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் மேற்கூரை தகரத்தாலும், பக்கவாட்டு சுவர் மண்ணாலும் கட்டப்பட்டுள்ளது. மேலும் தகர செட்டிலும் உணவு கூடம் இயங்கி வருகிறது. பலத்த காற்றுடன், மழை பெய்யும்போது வகுப்பறைகளின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள் நலன் கருதி, இப்பள்ளிக்கு கட்டிட வசதி செய்து தர கோரி, கிராம பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘‘வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் இந்த கிராமம் உள்ளது. இதனால் புதிய கட்டிடம் கட்டும் திட்டம் கிடப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். …