திருவொற்றியூர்: மணலி, ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் செல்வி (52), ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வந்தார். நேற்று இவருக்கு வயிறு வலித்துள்ளது. இதுபற்றி சதாசிவம் (60) என்பவரிடம் தெரிவித்துள்ளார். அவர், செல்வியை அழைத்து சென்று, மணலி ஈ.வே.ரா பெரியார் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார்.அதை குடித்த சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி, செல்வி சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சதாசிவம், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், செல்வியை பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த மணலி போலீசார், செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். …