ஆரல்வாய்மொழி :ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பரகோடி கண்ட சாஸ்தா ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. குறிப்பாக பங்குனி மாதத்தில் 10 நாள் திருவிழா மிக விமரிசையாக நடப்பது வழக்கம். கோயிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோயிலின் பின்புறம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தெப்பகுளம் உள்ளது. குளத்திற்கு வடக்கு மலை பகுதியில் இருந்து வருகிற ஓடையின் மூலம் தண்ணீர் வருகிறது. குளம் மழைக்காலங்களில் நிரம்பி காணப்படுவது வழக்கம். குளத்தின் அருகே இந்திரா நகர், ஜீவா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் அந்த பகுதியில் உள்ளன. பொது மக்கள் அதிக அளவில் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.குளத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த நிலையில் குளத்தின் பக்கச்சுவரை விட குடியிருப்பு பகுதிக்கு செல்லுகின்ற சாலை உயரமாக உள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் இருந்து குளம் தாழ்வாக உள்ளது. ஆகவே அந்த வழியாக பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்ற நிலை உள்ளது.சரியான மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தற்போது தெப்பக் குளத்தில் தண்ணீர் பெருகி காணப்படுகிறது. அந்த பகுதியில் சிறுவர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே மிதி வண்டியுடன் தெப்பகுளத்தில் விழுந்த சிறுவன் ஒருவனை உடனே பொது மக்கள் பத்திரமாக மீட்டனர். ஆகவே மீண்டும் அதே போல் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெப்பக்குளம் பக்கச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….