திருப்பத்தூர் : கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழுஊரடங்கு காரணத்தால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வனத்துறையினர் சாலையை அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகளவில் பரவி வரும் காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை பின்புறம் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் குவிய தொடங்கினர். மேலும் நோய்த்தொற்று அதிகளவில் பரவுவதால், தற்போது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.இதன்காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் யாரும் குளிக்க செல்லக்கூடாது என்று, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரி மற்றும் போலீசார் கூறுகையில், தற்போது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதாலும், தற்போது சுற்றுப்பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், பொதுமக்கள் கோயிலுக்கு செல்வதாக கூறி, நீர்வீழ்ச்சிக்கு செல்கின்றனர். ஆகையால் தற்போது இந்த சாலை முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. யாரையும் கோயிலுக்கு மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதிப்பதில்லை. மேலும், ஊரடங்கு முடிவு அறிவிக்கும் வரையும், நீர்வீழ்ச்சிக்கு யாரையும் அனுமதிக்கமாட்டோம்.அதன்காரணமாக 24 மணி நேரமும் போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….