சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் 360 தூய்மை பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மளிகை தொகுப்பு நிவாரண பொருட்களை வழங்கி பேசியதாவது:தமிழக அரசு பொறுப்பேற்று 15 நாட்களில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருவது குறித்து மக்கள் உணர்ந்திருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை நிறைவேற்றும் பணியில் தமிழக முதல்வர் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடுமையான கொரோனா கால யுத்தத்தை தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு பணியாளரும் சிப்பாய் எவ்வாறு நாட்டை பாதுகாப்பாரோ அது போன்ற பணியை செய்ததால் இன்று விலைமதிப்பற்ற உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்காக தூய்மைப்பணியாளர்களின் பாதங்களில் முதலில் எங்களது நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மருத்துவத்துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் அளப்பரிய தியாகத்தை செய்கின்றனர். உங்களுக்கு எந்த அளவிற்கு உதவிக்கரம் நீட்டினாலும் உங்கள் பணிக்கு எதுவும் ஈடாகாது. இதே போல் தொடர்ந்து காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ரத்தினவேல் மற்றும் மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….
தமிழக அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
previous post