கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் களம் அனல்பறக்கும் நிலையில், பாஜவின் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா மம்தாவின் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நாடு அசாதாரண சூழலில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்கள் சாரை சாரையாக பாஜவுக்கு தாவி வருவதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்நிலையில், பாஜவின் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா, திரிணாமுல் காங்கிரசில் நேற்று இணைந்தார். கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் தலைமையகத்தில் அவரை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சுதீப் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் வரேற்றனர்.திரிணாமுலில் சேர்ந்தது குறித்து யஷ்வந்த் சின்கா கூறியதாவது: நாடு அசாதாரணமான சூழலை எதிர்கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் வலிமை ஜனநாயக அமைப்புகளின் பலத்தில் உள்ளது. ஆனால் தற்போது நீதித்துறை உட்பட அனைத்து அரசு அமைப்புகளும் பலவீனமடைந்துள்ளன. தற்போதைய அரசின் தவறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த யாருமில்லை. வாஜ்பாய் காலத்தில் பாஜ ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால் தற்போதைய அரசு நசுக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. அதனால்தான் அகாலிதளம், பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகள் பாஜவை விட்டு விலகிவிட்டன. இன்று யார் பாஜவுக்கு நிற்கிறார்கள்? அதிகபட்டியான பொறுப்புகளுடன் கூறுகிறேன் தேர்தல் ஆணையம் கூட இன்று நடுநிலையுடன் நடந்து கொள்வதில்லை.இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில் கடந்த 1990 முதல் 1991 வரை மத்திய நிதி அமைச்சராக யஷ்வந்த் சின்கா பதவி வகித்துள்ளார். பின்னர் வாஜ்பாய் ஆட்சியில் 1998 முதல் 2002 வரை நிதி அமைச்சராகவும், பின்னர் 2004 வரை வெளியுறவு அமைச்சராக இருந்துள்ளார். 1984ல் அரசியலில் சேர்ந்த இவர் மோடி ஆட்சியில் ஒதுக்கப்பட்டதால் கடந்த 2018ல் பாஜவிலிருந்து விலகினார். இவரது மகன் ஜெயஷ்ந்த் சின்கா பாஜ எம்பியாக உள்ளார். 2014-19 வரை மத்திய இணை அமைச்சராக இருந்த ஜெயந்த் சின்காவுக்கு 2வது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை….