சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டுமான பணியின் போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கடந்த 2 மாதங்களில் இதேபோல 3 பேர் உயிரிழந்துள்ளதால் அங்குள்ள தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஐ.ஐ.டி. என்கிற அறிவியல் வளாகத்தில் மேற்கொண்டுள்ள கட்டுமான பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த கண்ணு பெஹரா என்பவர் 3வது மாடியில் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதேபோல் பிப்ரவரி 15ம் தேதி மார்பிள் கற்கள் இறக்க வந்த காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி விஜய் என்ற இளைஞர் மீது மார்பிள் கற்கள் விழுந்து உயிரிழந்தார். ஜனவரி 28ம் தேதி அசாமை சேர்ந்த உஷ்மான் அலி என்ற தொழிலாளி மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த கட்டுமான பணியில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி அமர்த்தப்பட்டுள்ளதே மரணத்திற்கு காரணம் என்று தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் எந்நிலையிலும் மரணத்தை எண்ணி தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். …