திருவள்ளுர்: திருவள்ளூர் ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மனைவி கலா (45). இவருக்கு கடந்த 10ம் தேதி தொலைபேசி மூலமாக தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘உங்களுக்கு ரூ.10 லட்சம் லோன் வாங்குவதற்கான தகுதி உள்ளது. அதனால் முதல் கட்டமாக நீங்கள் ரூ.19 ஆயிரத்து 195 செலுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதை நம்பிய கலா, போன் செய்தவரின் ‘கூகுள் பே’ நம்பருக்கு பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர், அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் கலா. உடனை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார், அந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்ததில், அந்த நபர், சென்னை சாலிகிராமம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் விரைந்து சென்ற, அந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்து திருவள்ளுருக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் பரத் (28) என்பதும், 2019ம் ஆண்டு முதல் தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்து ரூ.15 லட்சம் வரை ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. …