டெல்லி: நேபாளத்திற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் மிரட்டிய கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பல நாடுகளிலும் படிப்படியாக பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க மத்திய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரஜெனகா நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து தயாரித்த ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கும் கடந்த 3ம் தேதி அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி தரப்பட்டுள்ளது. அதோடு, நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைகள் நடத்தப்பட்டன. தடுப்பூசியை சேமித்து வைத்துள்ள இடத்திலிருந்து எடுத்து வருவது. ஜனவரி 13 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நேபாளத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்களின் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை வாங்க நேபாளம் இந்தியாவின் உதவியை நாடி இது தொடர்பாக நேபாள அரசு இந்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில் நேபாளத்திற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. …