தஞ்சை: ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் போலீசுக்கு தொடர்பு இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ்(50), எம்.ஆர்.சுவாமிநாதன்(48) ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். பின்னர் புதுக்கோட்டை அருகே வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, நள்ளிரவு கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.இதையடுத்து நீதிபதி தரணிதரன் இருவரையும் ஆக.19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார். அதன்படி கும்பகோணம் கிளை சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். அதனையடுத்து கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் கும்பகோணம் இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜராகி, இருவரையும் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறி 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.அதனை விசாரித்த நீதிபதிகள் நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கி உத்திரவிட்டார். இந்தநிலையில், தற்போது ஹெலிகாப்டர் சகோதரர்கள் குறித்து ஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த வழக்கில் வழக்கில் போலீசுக்கு தொடர்பு இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது மோசடி புகாரில் தற்போது வரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான மோசடி புகாரில் புலன் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். …