ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் விதி மீறிய அரசு பஸ்கள் உட்பட 10 வாகனங்களுக்கு ₹87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாத 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் நேற்று, நேற்று முன்தினம் காலை மாலை வேளைகளில் ராணிப்பேட்டை, வாலாஜா ஆற்காடு அரக்கோணம் பகுதிகளில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகேசன் (ராணிப்பேட்டை)செந்தூர்வேல் (அரக்கோணம்) ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, விதிமுறை மீறி அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற 2 அரசு பேருந்துகள், 1 தனியார் பேருந்து, 7 தனியார் கம்பெனி வேன்கள் என மொத்தம் 10 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் வரி செலுத்தாத 1 மேக்சிகேப், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகள், 1 ஆட்டோ வாகனங்களுக்கு அபராதத் தொகையாக ₹87 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாத 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தெரிவித்தார்….