பந்தலூர்: பந்தலூர் அருகே ஆற்றின் கரையில் முதலை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குளிக்க சென்ற மக்கள் ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அத்திக்குன்னு, கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் உள்ள ஆற்றில் நேற்று முதலை ஒன்று கரையோரம் இருந்ததை ஆற்றுக்கு சென்ற ஒருவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆற்றுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் குளிக்க செல்வது வழக்கம். ஆற்றின் கரையோரம் முதலை இருப்பதால் மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். முதலை நடமாட்டம் உள்ள ஆற்றிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் குளிக்கவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்….