ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தவும், நாட்டு படகு மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த சூழலில் ராமேஸ்வரத்தில் 13 விசைப்படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட மீன் வளங்களை அழிக்கும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகாரில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து மீனவர்கள் முதல் நாள் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் நேரடியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. …